மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்புகிறேன்- மாதுரி தீட்சித்


அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் முன்னாள் இந்தித் திரையுலக கனவுக் கன்னி மாதுரி தீட்சித் மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்பி வர தீர்மானித்துள்ளாராம்.

44 வயதாகும் மாதுரி தீட்சித் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் இந்தித் திரையுலகைக் கலக்கியவர். மிகச் சிறந்த நடனக்கலைஞராக, அட்டகாசமான நடிகையாக அறியப்பட்டவர். ஐஸ்வர்யா ராயின் எழுச்சிக்கு முன்னர் மாதுரியின் நடிப்பிலும், நடனத்திலும் மயங்கிக் கிடந்தனர் இந்தித் திரையுலக ரசிகர்கள்.

1999ம் ஆண்டு அமெரிக்காவின் டென்வரில் வசித்து வரும் டாக்டர் ஸ்ரீராம் மாதவ் நெனேவை மணந்து கொண்டு அமெரிக்காவில் போய் செட்டிலானார் மாதுரி.

இரு குழந்தைகளுக்குத் தாயான மாதுரி தொடர்ந்து அமெரிக்காவிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் இந்தியாவுக்கேத் திரும்பவுள்ளாராம். இங்கு ஒரு டிவியில் ஒளிபரப்பாகவுள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட ரியாலிட்டி ஷோவில் நடுவராக பணியாற்றும் மாதுரி, தனக்கும், தனது குடும்பத்துக்கும் வசதியாக, இந்தியாவிலேயே தங்கி விட தீர்மானித்துள்ளாராம்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், எனது ரசிகர்களுக்கு, நாங்கள் இந்தியாவுக்கேத் திரும்பவுள்ளோம். மீண்டும் தாயகம் திரும்புவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்த மாதுரி 2007ல் ஆஜா நச்லே என்ற படத்தில் மீண்டும் நடித்தார். இப்போது அவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இதை மனதில் கொண்டுதான் மீண்டும் இந்தியாவுக்கு வரும் முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.

No comments: